Tuesday, August 19, 2008

கவிக்குயில் சௌந்தரா கைலாசம் அவர்களுக்குக் கவிஞர்களின் வாழ்த்து

பாவேந்தர்மரபுக் கவிஞர்களுள் ஒருவராகிய வேணு.குணசேகரன் அவர்கள் நமது
போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர்.மரபிலக்கணநெறி போற்றி மனங்கவரும் பாக்களை யாத்துவரும் இவர் இயற்றிய “போர்வாளும் பீரங்கியும்” என்னும் தலைப்பிலமைந்த குறுங்காப்பியம் வீரபாண்டியக் கட்டபொம்மனின்
எழுச்சிமிகு வரலாறுணர்த்தும் சிறப்புமிகு குறுங்காப்பியமாகும். திருப்பாவை,திருவெம்பாவை போன்று திருத்தமிழ்ப்பாவை எனும் உருக்கமிகு நூலியற்றித் தமிழன்னையை மனங்கனியப்போற்றும் மாண்பமை நூல் வழங்கித் தமிழரின் மொழியுணர்வுக்குத் தக்க ஊக்கமருந்து வழங்கியுள்ளார்.
இவர் அமைப்பாளராகவும் நிறுவனராகவும் அயராது பணிபுரிந்து “எழில் கலை மன்றம்” என்னும் அமைப்பைக் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார்.
இந்த அமைப்பின் சார்பில் திங்கள்தோறும் பாட்டரங்கம்,உரையரங்கம் ஆகியன நடத்திவருகிறார்.
வங்கி அலுவலராகிய இவர் திங்கள்தோறும் யாப்பிலக்கண வகுப்பு நடத்தி
இளங்கவிஞர்களை முறையான மரபிலக்கண நெறிக்கு ஆற்றுப்படுத்திவரும் செய்தி நம் மனத்தை மகிழ்விக்கும் மற்றொரு செய்தியாகும்.
அகவைமுதிர்ந்த தமிழ்ச்சான்றோர்களை அவர்களது இல்லத்துக்கே சென்று கண்டு,விருது வழங்கிப் பாராட்டி உயிர்தளிர்ப்பச் செய்துவருகிறார்.
இரண்டு திங்களுக்கு முன்னர் ஆட்சிமொழியறிஞர் கோ.முத்துப்பிள்ளை அவர்களை,அவரது இல்லத்துக்கே சென்று விருது வழங்கிப் பாராட்டிவந்தார்.
16/8/08 ஞாயிற்றுக்கிழமையன்று,இவரும் இவரது எழில்கலைமன்றத்தினரும்,
கவிக்குயில் சௌந்தரா கைலாசம் அவர்களை,அவரது இல்லத்துக்கே சென்று
பாராட்டிவந்துள்ளார்.
கவிக்குயில் சௌந்தரா கைலாசம்,தமிழ்நாட்டின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்.
நாட்டுப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் வளர்க்கும் நல்ல கவிதைகள் பலவற்றை யாத்தளித்துள்ளார்.
அவரைச் சென்று பார்த்துப் பாராட்டிய பாவலர்களும்,இத்தகு சிறப்புமிகு பணியை ஆற்றிவரும் வேணு.குணசேகரன் அவர்களும் நமது வாழ்த்துக்கு என்றென்றும் உரியவர்கள்.

No comments: