Saturday, March 29, 2008

குருதிக் கொடை வள்ளல் பாற்கரன்

கடையேழு வள்ளல்களின் கொடைப் பண்பை இலக்கியங்களில் படித்திருக்கிறோம்.அவர்கள் தமது உடைமைகளைப் பிறர்க்குக் கொடையாக வழங்கினார்கள்.ஆனால் குருதிக்கொடைஞர்கள் தமது குருதியையே பிறர் நோயினின்றும் நீங்கி நலம் பெற வழங்குகிறார்கள்.இத்தகைய குருதிக் கொடைஞர்களில் முதலிட்ம் வகிப்பவர்,சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணியாற்றும் திரு.பாச்கரன் எனலாம்.
இதுவரை நூற்றுப்பதினான்கு முறை(114) குருதிக்கொடை வழங்கியுள்ளார்,பாச்கரன்.
1987 முதல் வருமான்வரித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் பாச்கரன்,பாரதி பாச்கரன் எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இவர் பட்டிமன்றம்,கருத்தரங்கம் ஆகியவற்றில் சிறப்பாகப் பொழிவு ஆற்றுகிறார்.
29/11/1959 அன்று பிறந்த இவர் நாள்தோறும் புதிய முறைகளில் சமுதாயநலப் பணி ஆற்றிவருகிறாற்.
தமக்கு எத்தகைய விளம்பரமும் கூடாது என இவர் மறுத்துவிட்டார்.
இப்பெருந்தகை நோய்நொடியின்றி அனைத்துவளனும் பெற்று வல்லாங்கு வாழ்க என வாழ்த்துவோம்.

Friday, March 28, 2008

பட்டிமன்றம் பக்தவத்சலம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தைப் பார்த்திருப்பீர்கள்.இரண்டு நூற்றாண்டுகளாக
எழுச்சியுடன் செயல்படும் ஒய்.எம்.சி.ஏ.அமைப்பின் இலக்கியப்பிரிவுதான்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்--இந்தப்பெயரை வழங்கி இதனைத் தோற்றுவித்தவர்
தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை
இம்மன்றம் கூடும்.தமிழறிஞர்கள் மட்டுமன்றிப் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்துவர்.
இம்மன்றத்திற்குக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செயலாளராகப் பணிபுரிந்துவருபவர் பொறியாளர் கெ.பக்தவத்சலம் ஆவார்.
சென்னைக் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றுள்ள இவருக்கு ஓய்வில்லாத வேலை-பட்டிமன்றத்தைப் பாங்குற நடத்துவதுதான்.
எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கும் இப்பெருந்தகைக்குத்
தெரியாத அறிஞர்களோ,கலைஞர்களோ,எழுத்தாளர்களோ இல்லை என்றே
கூறிவிடலாம்.
அனைவரையும் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு அழைத்து அவரவர் விரும்பும் பொருளில்
பொழிவாற்றவைத்துத் தமிழன்பர்களுக்குச் செவிக்குணவு நல்குதலே இவரது
பணி.
தமிழ்நலம்,தமிழின் தனிச்சிறப்பு ஆகியவை காற்றில் பறந்து வெறும் நகைச்சுவைக் கச்சேரிகளாகத் தமிழ்க்கூட்டங்கள் மாறிவரும் இந்நாளில்
தரத்தையும் கருத்தையும் பேணிக் காக்கும் ஒருசில அமைப்புகளில்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றமும் ஒன்று.
அச் சிறப்புக்கு முழுமுதற் காரணம் திரு கெ.பக்தவத்சலம் அவர்கள்தான்.
ஊதியம் கருதாது உயர்தமிழ்ப்பணியாற்றிவரும் இப்பெருந்தகை
நடத்தும் நிகழ்ச்சிகளால் பட்டிமன்றம் ஒரு பல்கலைக்கழகம் போல் செயற்படுகிறது எனல் உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
எழுபது வயதை எட்டிப் பிடிக்கும் வேளையிலும் எழுச்சியுடன் செயற்படும்
பொறியாளர் பக்தவத்சலனார் 'உடல்நலனும் அனைத்து வளனும் பெற்று
மனைவி மக்களுடன் நீடு வாழ்க' என வாழ்த்துகிறோம்.

Thursday, March 27, 2008

பொன்னவைக்கோ வாழியவே


தமிழ்நிலந் தன்னில் பல்துறைக் கல்வியும்
அமைவுறச் செழித்திட அயரா(து) உழைத்திடும்
பச்சமுத்துவின் பண்பார் துணைவர்;
பொருள்வளம் நாடியே விரைந்திடும் உலகில்
தமிழ்நலம் பெருக்கிடத் தளரா உளத்துடன்
பொறியியல் பணியைப் பொருக்கென விடுத்தே
கணித்தமிழ் நூல்பல பயனுறப் படைத்தும்
இணையப் பல்கலைக் கழகம் தன்னை
இணையிலாப் பொலிவுடன் இயங்கிடச் செய்தும்
அறிவியல் வளமெலாம் அருந்தமிழ் பெறவே
அறிஞர் கூடிட ஆவன புரிந்தும்
கணினி நுட்பமும் பொறியியல் ஒட்பமும்
அனைவரும் அறிந்திட இதழ்களில் எழுதியும்
ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் உயர்ந்திட
ஓயா(து) உஞற்றிடும் உயர்பேரறிஞர்;
கனிந்த உள்ளமும் இன்முகச் செவ்வியும்
காந்தம் போன்றே நண்பரை ஈர்த்திடும்;
புன்னகை மின்னிடும் பொலிவுறு முகமோ
பொய்சொலக் கேட்டால் பொங்கிடும் எரிமலை;
செந்தமிழ் தவழ்ந்திடும் செவ்விதழ் தன்னில்
நெருப்பும் காணலாம் நெறியில் பிறழ்ந்தோர்;
காட்டாங் குளத்தூர்க் கரம்பை இவர்
காட்டிய உழைப்பால் கல்விச்சோலை;
நாட்டினில் முதன்மை நாட்டிய நிறுவனம்;
ஈட்டிய புகழால் ஈர்த்திடும் பலப்பல
நாட்டிலிருந்து நல்லறிஞர் தமை;
தன்னவைக் களத்தில் என்னையும் ஏற்றுப்
பண்புடன் பரிவும் அன்பும் செலுத்திடும்
பொன்னவைக்கோ எனும் பெருந்தகையோரை
என்ன சொல்லிப் போற்றிட இயலும்?
பாரது போற்றப் பாரதிதாசன்
பல்கலைக் கழகத் தலைமை ஏற்றார்;
தாய்மொழிக் கல்வியைத் தகவுடன் போற்றித்
தமிழ்மொழி பயின்றிடச் சட்டம் வகுத்தார்;
சமச்சீர்க் கல்வி அமைவுடன் தழைத்திட
அரசினர் குழுவில் அரும்பணி புரிகிறார்;
திட்பமும் நுட்பமும் செறிந்த செயலினர்;
நற்றமிழ்ப் புலவரைச் சுற்றமாய்ச் சூழ்ந்திடும்
பெற்றிமை பேணும் மற்றொரு பாரி;
களைப்பும் அலுப்பும் கனவிலும் அறியா
உழைப்பின் திருவுரு;உயர்குணக் கொள்கலன்;
கல்வியின் புகலிடம்; அறிவின் வைப்பகம்;
பச்சமுத்து மெசும் முத்து; பாரினில்
பல்துறை வித்தகர் போற்றும் நன்மணி;
மாணவர் மகிழ்வுடன் அவாவிடும் பசும்பொன்;
வாழிய! வாழிய பல்வளம் பெற்று!
மனைவி மக்கள் சுற்றம் எல்லாம்
நனிபல் நலனுடன் வாழ்க! வாழ்கவே!

வா.மு.சேதுராமன்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் புறநானூற்று வீரமெல்லாம்
ஒருங்கு திரண்டு வந்ததைப்போன்ற எழுச்சியும் கிளர்ச்சியும் மிக்க உருவினர்.
‘கெடல் எங்கே தமிழின் நலன்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!'
என்னும் பாவேந்தர் வாக்கே தம் வாழ்வுக் குறிக்கோள் எனக் கொண்டு அல்லும் பகலும் அருந்தமிழுக்குத் தொண்டாற்றுபவர்.உலகின் எந்த மூலையில் தமிழர் இடருற்றாலும் ஓடோடிச் சென்று உறுதுணை புரிய உழைப்பவர்.உலக உருண்டையை ஐம்பது முறை வலம் வந்தவர்.
நூறாயிரம் பாடல்களுக்கு மேல் தமிழ்க்கவிதை யாத்து நூற்றுக் கணக்கான
நூல்களை வெளியிட்டவர்.அவரை வாழ்த்தினால் அனைத்துத் தமிழ்த்தொண்டர்களையும் வாழ்த்தியதற்கு ஒப்பாகும்.எனவே அவரை வாழ்த்துவதில் பேருவகை கொள்கிறோம்.
ஆண்ட நாள் ஆண்ட பாண்டியன் போலவே
நீண்டு உயர்ந்த நெடிய தோற்றம்;
பூண்ட செருக்கிளர் பூலித்தேவனோ?
மீண்டு வந்த கட்டபொம்மனோ?
கரிகால் வளவனோ? செங்குட் டுவனோ?
ஆரியர்ச் சாய்த்த நெடுஞ்செழியனோ?
யாரிவன்? என்றே திகைக்கச் செய்யும்
சீரிய தோற்றம்; நேரிய சிந்தை;
கூரிய மதிநலன்; நினைவெலாம் தமிழ்நலன்;
குழந்தை போன்றே குமிழிடும் முறுவலன்;
அழகினில் முருகன்; பழகுதற் கினியன்;
நாடு சமயம் கட்சி என்னும்
வரம்புகள் தகர்த்தே அன்பரைப் பெற்றவன்;
ஆதி ராமனோ ஆரியர் திலகம்;
சேது ராமனோ செந்தமிழ்த் தலைவன்;
ஒவ்வொரு நொடியும் ஒண்டமிழ் நலனே
செவ்விதிற் காக்கச் செயற்படும் மறவன்;
அற்றைக் கீரர் பிற்றை இலக்குவர்
ஓருருக் கொண்ட அஞ்சா நெஞ்சினன்;
அன்னைத் தமிழ்நலன் போற்றிடும் பணியில்
சென்னைக் கோட்டை தில்லிசெங் கோட்டை
அண்ணல் இவனது அறிவுரை கேட்கும்;
ஆட்சி பயிற்சி அனைத்துத் துறையிலும்
மாட்சி பெற்று மாத்தமிழ் சிறந்திட
வாழ்நாள் எல்லாம் வருந்தி உழைப்பவன்;
உரிமை அடந்திட உயர்தமிழ் சிறந்திட
பெருமிதம் பொங்கிடப் பெருநடைப் பயணம்
சிறப்புடன் நடத்திடும் சீர்மை மிக்கவன்;
ஒண்டமிழ்க் கவிநலன் உலகோர் போற்றிட
உலகெலாம் வலம்வரும் ஒப்பிலாச் சிறப்பினன்;
தமிழின் தலைவன் இவன் என்பதால்
அமிழ்தத் தமிழால் போற்றி வணங்குவேன்;
பெருமைத் துணைவி சேதுமதியின்
பிரிவால் பெற்ற பெருந்துயர் மாற்றித்
தாயுமாகிப் புதல்வரைத் தாங்குக!
உரிமை மக்களும் உயர்புகழ்ச் சுற்றமும்
வையை யாற்று மணலினும் பன்னாள்
வாழிய! வாழிய! வண்டமிழ் போன்றே!

ஆசிரியர் அடி போற்றி

அன்னையையும் தந்தையையும் எண்ணி வணங்கி அதன்பின் ஆசிரியர்களை
வணங்கவேண்டியது நமது கடன்.அவ்வகையில் எனைப் பெற்ற அன்னையும் தந்தையும் இவ்வுலகில் இல்லையெனினும் அவர்தம் நினைவைப் போற்றி வணங்கி என் பணியைத் தொடங்குகிறேன்.
முதல் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு வரை எனக்குப் பாடம் நடத்தி நல்வழிப்படுத்திய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நினைந்து அவர்தம் அடி போற்றி இவ்வலைப்பூவைக் கோக்கத் தொடங்குகிறேன்.

Tuesday, March 25, 2008

Best Free Hit Counters
Free Wordpress Themes
Free Wordpress Themes

நாளும் ஒருவரை நாவாரப் போற்றுவோம்

நாளும் ஒருவரை நாவாரப் போற்றுதல் நம் கடன்.
நற்றமிழ் அறிஞர்களை,தமிழினம் தழைத்திட உழைத்துவரும் பிறதுறையினரை,
மருத்துவர்கள்,
பொறியாளர்கள்,
பல்வேறு அலுவல் புரிவோர் யாவராயினும் தமிழினம்,தமிழ்மொழி வளர்ந்திடப் பாடுபடுவோரை வாழ்த்த விரும்புகிறோம்.
அவர்களுக்கு நன்றி கூறுதற்கும்,அவர்களை இப்பணியில் மேலும் ஊக்கப்படுத்துதற்கு இவ்வாழ்த்து தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Thursday, March 20, 2008

செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்

வாழ்நாளெல்லாம் தமிழ்நலனே தமது உயிர்மூச்செனக் கொண்டு
அல்லும் பகலும் தமிழ்வளர்ச்சிக்காக உழைத்த பேரறிஞர் சி.இலக்குவனார்
நினைவைப் போற்றி நமது பணியைத் தொடங்குதலே நம் பணிக்கு ஏற்றம் வழங்கும்.
1933-இல் திருவையாற்றில் புலவர் வகுப்பு மாணவராக இருந்த காலம் தொடங்கி 1973-இல் தமது மூச்சு பிரியும் வரைத் திருக்குறள் பரப்பும் பணியைக் கைம்மாறு கருதாது ஆற்றிவந்தார்இப்பணியில் அவருக்கு ஈடு இணையாகக் கூறத் தகுந்தவர் வேறு எவரும் இலர்.
தமிழ்ப்பகைவர்களை எதிர்த்துத் தமிழின் சிறப்பைப் போற்றிடும் செயல்களில்
முனைந்து உழைத்தவரும் அவரே.
மாணவராக இருந்தபொழுது தமிழைக் குறை கூறியும் வடமொழியை மேன்மைப்படுத்தியும் உரையாற்றிய தமது கல்லூரி முதல்வர் பி.சா.சு.சாத்திரியாரை எதிர்த்துப் போர்முழக்கம் புரிந்தார்.
1938-ஆம் ஆண்டு இந்திஎதிர்ப்புப் போரில் முனைந்து வினையாற்றினார்.
பணியாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும்
இதழ்கள் நடத்தியும் மக்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வும் உரிமைவேட்கையும்
ஊன்றப் பாடுபட்டார்.
பதவியை இழந்தபோதும் சிறைசெய்யப்பட்டபோதும் சிறிதும் கலங்காது
தமிழ் உரிமைப்போர்த் தலைமை பூண்டார்.
தமிழ்நில வரலாற்றில் இப்படி ஒரு போராளியை இவருக்குமுன்னும் பார்த்திருக்கமுடியாது.இவ்பருக்குப் பின்னும் இப்படி ஒரு பேராசிரியரை
அடையாளம் காட்ட முடியவில்லை.
1944-இல் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது வகுப்பில் வருகைப்பதிவின் போது 'ஆஜர்'
என்றுகூறிவந்த மாணவர்களை ‘உளேன் ஐயா' என்றுகூறவைத்தார்.
அப்போது ஏனையதமிழாசிரியர்களே இதனை எதிர்த்தார்கள் என்பது இங்குக்
குறிப்பிடத்தக்கது.
கல்லூரிநேரத்தில் மாணவர்களிடையே தமிழுணர்வு பரப்பியதுடன் அமையாது
மாலைநேரத்தில் மன்றங்களீன் மூலம் தொல்காப்பியம்,திருக்குறள்,சங்க இலக்கியம் ஆகியவை குறித்த இலவசவகுப்புகள் நடத்தித் தமிழ்உணர்வுடன்
தமிழறிவும் தழைத்தோங்கச் செய்தார்.
ஓயாது உழைத்த இலக்குவனார்க்குப் பாராட்டும் பதக்கமுமா கிடைத்தன?
'கருப்புச் சட்டைக்காரன் மாணவர்களைக் கெடுக்கிறான்' என்னும் வசைமாரி
பொழிந்தனர்.கல்லூரி நிர்வாகத்தினர் பணியைவிட்டுத்துரத்தினர்.
தாம் பணியாற்றிவந்த ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் நீக்கப்பட்டபொழுது
தமது நிலைப்பாட்டைப் பேராசிரியர் சற்றுக்கூட மாற்றிக்கொள்ளவில்லை.
மீண்டும் தமிழுரிமை முழக்கத்தைத் தவறாது முழங்கிவந்தார்.
1965-இல் இந்திஎதிர்ப்புப் போரின்போது கைது செய்யப்பட்ட போதும் தமது
போர்ப்பண்பை மாற்றிக் கொள்ளவில்லை.
“தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்” என்னும் பெயரில் குமரி முதல் சென்னை வரை நடைமேற்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியப்பாதுகாப்புச் சட்டம் என்னும் கடுமையான பிரிவின்கீழ்
எவ்வித நீதிவிசாரணையுமின்றி வேலூர்ச்சிறையில் அடைக்கப்பட்டார்
இரண்டரை மாதம் சிறைவாசம்!ஒரு மொழியின் நலனுக்காகப் போராடி
ஒரு மொழிப்பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு இதுபோன்று உலகில் வேறு எங்கேனும் நடந்ததுண்டா?
மீண்டும் பதவியை இழந்தார்.
துன்பமும் தொல்லையும் அவருக்குத் தொடர்ந்துநிகழ்ந்தபோதும்
எதனைப் பற்றியும் கவலைகொள்ளாது தமது தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

இலக்குவனாரின் கொள்கைப்பயணம் குறித்துத் தனியே ஒரு வலைப்பூ வழங்குதலே பொருந்தும்.
அந்தத் தமிழ்ப்போராளியைப் போற்றுதலே நமது தலையாய கடமை.
நன்றிமறந்த தமிழரிடையே மொழிநலனுக்காக எதிர்நீச்சல் வாழ்க்கை நடத்திய
அந்தத் தமிழ்த்தலைவரை நாளும் மறவாது போற்றுவோம்.
அவர் நினைவு தமிழர் உள்ளமெல்லாம் நிறைக.

Wednesday, March 19, 2008

வாழ்த்துவோம்

வாழ்த்துவோம் வாரீர்!
தமிழ் மொழி காக்க முனைந்தெழுவோரை
தமிழினம் தலைநிமிர்ந்திடத் தளராது உழைப்போரை
தம் நலம் கருதாது பதவி,பொருள் நாடாது
ஊனும் உயிரும் தேயத் தேய
உழைக்கும் பெருமக்களை
வாழ்த்துதற்கும்
வணங்குதற்கும்
இவ் வலைப்பூ வினையாற்றும்.