Friday, March 28, 2008

பட்டிமன்றம் பக்தவத்சலம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தைப் பார்த்திருப்பீர்கள்.இரண்டு நூற்றாண்டுகளாக
எழுச்சியுடன் செயல்படும் ஒய்.எம்.சி.ஏ.அமைப்பின் இலக்கியப்பிரிவுதான்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்--இந்தப்பெயரை வழங்கி இதனைத் தோற்றுவித்தவர்
தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை
இம்மன்றம் கூடும்.தமிழறிஞர்கள் மட்டுமன்றிப் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்துவர்.
இம்மன்றத்திற்குக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செயலாளராகப் பணிபுரிந்துவருபவர் பொறியாளர் கெ.பக்தவத்சலம் ஆவார்.
சென்னைக் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றுள்ள இவருக்கு ஓய்வில்லாத வேலை-பட்டிமன்றத்தைப் பாங்குற நடத்துவதுதான்.
எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கும் இப்பெருந்தகைக்குத்
தெரியாத அறிஞர்களோ,கலைஞர்களோ,எழுத்தாளர்களோ இல்லை என்றே
கூறிவிடலாம்.
அனைவரையும் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு அழைத்து அவரவர் விரும்பும் பொருளில்
பொழிவாற்றவைத்துத் தமிழன்பர்களுக்குச் செவிக்குணவு நல்குதலே இவரது
பணி.
தமிழ்நலம்,தமிழின் தனிச்சிறப்பு ஆகியவை காற்றில் பறந்து வெறும் நகைச்சுவைக் கச்சேரிகளாகத் தமிழ்க்கூட்டங்கள் மாறிவரும் இந்நாளில்
தரத்தையும் கருத்தையும் பேணிக் காக்கும் ஒருசில அமைப்புகளில்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றமும் ஒன்று.
அச் சிறப்புக்கு முழுமுதற் காரணம் திரு கெ.பக்தவத்சலம் அவர்கள்தான்.
ஊதியம் கருதாது உயர்தமிழ்ப்பணியாற்றிவரும் இப்பெருந்தகை
நடத்தும் நிகழ்ச்சிகளால் பட்டிமன்றம் ஒரு பல்கலைக்கழகம் போல் செயற்படுகிறது எனல் உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
எழுபது வயதை எட்டிப் பிடிக்கும் வேளையிலும் எழுச்சியுடன் செயற்படும்
பொறியாளர் பக்தவத்சலனார் 'உடல்நலனும் அனைத்து வளனும் பெற்று
மனைவி மக்களுடன் நீடு வாழ்க' என வாழ்த்துகிறோம்.

No comments: