Thursday, March 20, 2008

செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்

வாழ்நாளெல்லாம் தமிழ்நலனே தமது உயிர்மூச்செனக் கொண்டு
அல்லும் பகலும் தமிழ்வளர்ச்சிக்காக உழைத்த பேரறிஞர் சி.இலக்குவனார்
நினைவைப் போற்றி நமது பணியைத் தொடங்குதலே நம் பணிக்கு ஏற்றம் வழங்கும்.
1933-இல் திருவையாற்றில் புலவர் வகுப்பு மாணவராக இருந்த காலம் தொடங்கி 1973-இல் தமது மூச்சு பிரியும் வரைத் திருக்குறள் பரப்பும் பணியைக் கைம்மாறு கருதாது ஆற்றிவந்தார்இப்பணியில் அவருக்கு ஈடு இணையாகக் கூறத் தகுந்தவர் வேறு எவரும் இலர்.
தமிழ்ப்பகைவர்களை எதிர்த்துத் தமிழின் சிறப்பைப் போற்றிடும் செயல்களில்
முனைந்து உழைத்தவரும் அவரே.
மாணவராக இருந்தபொழுது தமிழைக் குறை கூறியும் வடமொழியை மேன்மைப்படுத்தியும் உரையாற்றிய தமது கல்லூரி முதல்வர் பி.சா.சு.சாத்திரியாரை எதிர்த்துப் போர்முழக்கம் புரிந்தார்.
1938-ஆம் ஆண்டு இந்திஎதிர்ப்புப் போரில் முனைந்து வினையாற்றினார்.
பணியாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும்
இதழ்கள் நடத்தியும் மக்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வும் உரிமைவேட்கையும்
ஊன்றப் பாடுபட்டார்.
பதவியை இழந்தபோதும் சிறைசெய்யப்பட்டபோதும் சிறிதும் கலங்காது
தமிழ் உரிமைப்போர்த் தலைமை பூண்டார்.
தமிழ்நில வரலாற்றில் இப்படி ஒரு போராளியை இவருக்குமுன்னும் பார்த்திருக்கமுடியாது.இவ்பருக்குப் பின்னும் இப்படி ஒரு பேராசிரியரை
அடையாளம் காட்ட முடியவில்லை.
1944-இல் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது வகுப்பில் வருகைப்பதிவின் போது 'ஆஜர்'
என்றுகூறிவந்த மாணவர்களை ‘உளேன் ஐயா' என்றுகூறவைத்தார்.
அப்போது ஏனையதமிழாசிரியர்களே இதனை எதிர்த்தார்கள் என்பது இங்குக்
குறிப்பிடத்தக்கது.
கல்லூரிநேரத்தில் மாணவர்களிடையே தமிழுணர்வு பரப்பியதுடன் அமையாது
மாலைநேரத்தில் மன்றங்களீன் மூலம் தொல்காப்பியம்,திருக்குறள்,சங்க இலக்கியம் ஆகியவை குறித்த இலவசவகுப்புகள் நடத்தித் தமிழ்உணர்வுடன்
தமிழறிவும் தழைத்தோங்கச் செய்தார்.
ஓயாது உழைத்த இலக்குவனார்க்குப் பாராட்டும் பதக்கமுமா கிடைத்தன?
'கருப்புச் சட்டைக்காரன் மாணவர்களைக் கெடுக்கிறான்' என்னும் வசைமாரி
பொழிந்தனர்.கல்லூரி நிர்வாகத்தினர் பணியைவிட்டுத்துரத்தினர்.
தாம் பணியாற்றிவந்த ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் நீக்கப்பட்டபொழுது
தமது நிலைப்பாட்டைப் பேராசிரியர் சற்றுக்கூட மாற்றிக்கொள்ளவில்லை.
மீண்டும் தமிழுரிமை முழக்கத்தைத் தவறாது முழங்கிவந்தார்.
1965-இல் இந்திஎதிர்ப்புப் போரின்போது கைது செய்யப்பட்ட போதும் தமது
போர்ப்பண்பை மாற்றிக் கொள்ளவில்லை.
“தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்” என்னும் பெயரில் குமரி முதல் சென்னை வரை நடைமேற்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியப்பாதுகாப்புச் சட்டம் என்னும் கடுமையான பிரிவின்கீழ்
எவ்வித நீதிவிசாரணையுமின்றி வேலூர்ச்சிறையில் அடைக்கப்பட்டார்
இரண்டரை மாதம் சிறைவாசம்!ஒரு மொழியின் நலனுக்காகப் போராடி
ஒரு மொழிப்பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு இதுபோன்று உலகில் வேறு எங்கேனும் நடந்ததுண்டா?
மீண்டும் பதவியை இழந்தார்.
துன்பமும் தொல்லையும் அவருக்குத் தொடர்ந்துநிகழ்ந்தபோதும்
எதனைப் பற்றியும் கவலைகொள்ளாது தமது தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

இலக்குவனாரின் கொள்கைப்பயணம் குறித்துத் தனியே ஒரு வலைப்பூ வழங்குதலே பொருந்தும்.
அந்தத் தமிழ்ப்போராளியைப் போற்றுதலே நமது தலையாய கடமை.
நன்றிமறந்த தமிழரிடையே மொழிநலனுக்காக எதிர்நீச்சல் வாழ்க்கை நடத்திய
அந்தத் தமிழ்த்தலைவரை நாளும் மறவாது போற்றுவோம்.
அவர் நினைவு தமிழர் உள்ளமெல்லாம் நிறைக.

No comments: