Monday, April 14, 2008

அமெரிக்காவில் ஒரு தொல்காப்பியர்



அமெரிக்காவில் ஒரு -தொல்காப்பியர் ---


மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியர் அவர் காலத்தில் நிலவிய அனைத்துக் கலைகளையும் அறிந்திருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே தக்க சான்றாக விளங்குகிறது.


உளவியல் பற்றி மெய்ப்பாட்டியலும் அகப் பொருள் குறித்த நூற்பாக்களும் சமூகவியல் பற்றிப் பொருள்அதிகாரம் முழுமையும் திறம்பட விளக்குகின்றன.தொல்காப்பியர் காலத்தில் கிளைமொழிகளாக விளங்கிய


ஏனைய திராவிடமொழிகள் பற்றியும் வடபுலத்தில் நிலவிய பிராக்கிருதம்,அபப்பிரம்சம் பற்றியும் தொல்காப்பியத்தில் குறிப்புகள் கிடைக்கின்றன.


இதுபோன்றே இன்றைய தொல்காப்பியர் எனக் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவில் வாழும் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார்.


ஒன்றல்ல;இரண்டல்ல;பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவர் ஜார்ஜ் ஹார்ட்.


அமெரிக்காவில் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் திகழும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சமற்கிருத மொழியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.எச்.டி.பட்டங்களைப் பெற்ற ஜார்ஜ் அதுபோன்றே தமிழ் மொழியிலும் பட்டங்களைப் பெற்றவர்.


அவரது ஆய்வுப்பட்டம் தமிழ-சமற்கிருதம் ஒப்பாய்வில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது.


Tuesday, April 8, 2008

Best Free Hit Counters
MySpace Layouts
MySpace Layouts

Sunday, April 6, 2008

வளர்பிறைகள் வாழியவே - 2

நினைவில் வாழும் தமிழறிஞர் கு.சிவஞானம் அவர்களின் புதல்வியாரும் சென்னை இராணி மேரி கல்லூரித் தமிழ்ப்பேராசிரியருமாகிய முனைவர் சி.கலைமகள் அவர்களைப் பாராட்டுவதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

பேராசிரியர் கு.சிவஞானம் அவர்கள் தஞ்சை சரபோசி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தபோது (1965) தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்பு உரிமைப்போர் நிகழ்ந்த்து.திரு.ம.நடராசன்('புதிய பர்ர்வை' ஆசிரியர்),திரு.பன்னீர்செல்வம்(இப்போது ஓய்வு பெற்றுள்ள அரசு அலுவலர்)முதலிய பல எழுச்சிமிக்க மாணவர்கள் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட நேரம்;மாணாக்கர்கள் எவ்வகையிலும் அரசின் அடக்குமுறைக் கொடுமைகளால் அல்லலுற்றுவிடக் கூடாது எனத் தாயுள்ளத்துடன் பரிந்துவந்து உதவிய பேராசிரியர் கு.சிவஞானம் அவர்கள் பிந்தைய ஆண்டுகளிலும் இந்திஎதிர்ப்புப் போர்மறவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தார்.

அத்தகைய தமிழ் உரிமைமறவருக்கு 12/02/1965-இல் பிறந்த சி.கலைமகள் அவர்கள் 1985-இல் தமிழ் இளங்கலைப் பட்டத்தை முதல் வகுப்பு என்னும் சிறப்புத்தகுதியுடன் பெற்றார்.1987-இல் தமிழ் முதுகலைப் பட்டத்தையும் முதல் வகுப்பிலும் பல்கலைக்கழகச் சிறப்பு வரிசையிலும் பெற்றார்.

1989-இல் இளம் முனைவர்,2001-இல் பி.எச்.டி. எனப் பட்டங்களைக் குவித்த இவர்,ஓலைச்சுவடியியல்,மொழியியல்,சமற்கிருதம்,தஞ்சைமரபுவழி ஓவியம்ஆகிய துறைகளிலும் தேர்ச்சியடைந்துள்ளார்.

தமது தந்தையார் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பொறுப்பைத் திறம்பட ஆற்றியதுபோலவே கலைமகள் அவர்களும் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளர் பணியைச் சிறப்பாக ஆற்றினார்;ஆற்றிவருகிறார்.

1994-1996-இல் சென்னைக் கேளம்பாக்கம்,தனபாலன் மகளிர் கல்லூரியில் மாணவர் உளங்கொளத் தமிழ்க்கல்வி வழங்கினார்.இவரது அழுத்தம் திருத்தமான தமிழ் ஒலிப்பும்,சுவைமிக்க இலக்கிய எடுத்துக்காட்டுகளும், அனைவரையும் ஈர்க்கும் சொல்லாற்றலும் மாணவிகளுக்குத் தேனமுதமாய்ச் சுவையளிப்பன.

1996-இல் அரசு கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்.பொன்னேரி அரசு கல்லூரி,காயிதே மில்லத் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தபின்னர் 2006 முதல் இராணி மேரி கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார்.

மலைபடுகடாம்,அகநானூற்றில் பாலைப் பாடல்கள்,இலக்கியக் கட்டுரைகள் ஆகிய தரமுயர்ந்த ஆய்வுநூல்களைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக்ம்,அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,மலேயாப் பல்கலைக்கழக்ம் ஆகிய நிறுவனங்களில் இவர் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

தேசிய மாநாடுகளிலும்,பன்னாட்டு மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் குறள்,சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பரப்பும் நோக்குடன் இலக்கியப் பேருரைகளை ஆற்றியும் இளம்பேராசிரியர்களில் இணையற்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார்.

“இவள் தந்தை என் நோற்றான்கொல்?” எனும் சொல்லை அனைவர் உள்ளத்திலும் எழுப்பும் ஆற்றல் மிக்க முனைவர் சி.கலைமகள் அவர்களைப் பாராட்டுவோம்.

இவரைப் போன்றே தமிழாசிரியப் பணியை உணர்வுடனும் ஊக்கத்துடனும்

ஆற்றுவோர் யாராயினும் அவர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

வளர்பிறைகள் வாழியவே-1


வளர்பிறைகள் வாழியவே--1



பட்டிமன்றத்தில் வெட்டிப் பொழுது போக்கியும்
தமிழ் மொழியுணர்வும் இனவுணர்வும் சிறிதுமின்றித்
தமிழ் விரிவுரையாளரென வேடமிட்டுக் காலம் கழித்தும் வரும் தமிழாசிரியரிடையே மாணிக்கங்களென மிளிரும் தமிழ்மணிகளும் உள்ளனர்.
அவர்களை அடையாளம் காட்டவே இப்பகுதி விழைகிறது.
தமது கலலூரிப்பணி நேரங்களில் மாணாக்கரிடையே
இலக்கியவிழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நிறைவுகொள்ளாமல் ஒரு வலைப்பூவை நடத்தித் தமிழுலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்,இளங்கோவன்.
http://www.muelangovan.blogspot.com/
மேலே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்திற்குச் சென்றால்
பல பயனுள்ள இலக்கியச் செய்திகள் கிடைக்கும்
மிகவும் பிற்பட்ட சூழலில் தோன்றி(20/06/1967) தமது பெற்றோரின் ஊக்குவிப்பாலும் ஆசிரியர்களின் உறுதுணையாலும் தமிழ் முதுகலை,இளம் முனைவர்,முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்ற மு.இளங்கோவன், தாம் இதழியலில் கொண்டிருந்த ஆர்வத்தினால் இதழியலிலும் முதுகலைப் பட்டம்
பெற்றுள்ளார்.
‘மராட்டியர் ஆட்சியில் தமிழ் இலக்கியம்,தமிழகம்'என்னும் ஆய்வுத்தலைப்பில்
நிகழ்த்திய ஆய்வின் விளைவினால் இளம் முனைவர் பட்டம் ஈட்டினார்.
இன்றைய சூழலில் பாரதிதாசன் மரபுக்கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் இளைய தலைமுறையினருக்கு ஏற்படவேண்டும் என்னும் நல்லெண்ணம் இவரது பி.எச்.டி பட்டத்திற்கான ஆய்வுப்பொருளை "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க கவிதை:பாரதிதாசன் பரம்பரை-விளக்கம்,வரலாறு,மதிப்பீடு" என்றமைத்துக்கொள்ளத் தூண்டுகோலாகியது.
செயல்துடிப்பும் வினைத்திட்பமும் வாய்க்கப்பெற்ற இவ்விளைஞர் இயற்றிய
நூல்களின் பட்டியலே இவரது புலமைக்குச் சான்றாக விளங்குகிறது.
1.மாணவராற்றுப்படை--1990
2.பனசைக்குயில் கூவுகிறது--1991
3.அச்சக ஆற்றுப்படை--1992
4.மராட்டியர் ஆட்சியில் தமிழும் தமிழகமும்--1994
5.பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு--1996
6.இலக்கியம்-அன்றும் இன்றும்--1997
7.மணல்மேட்டு மழலைகள்---1997
8.வாய்மொழிப்பாடல்கள்--2001
9.பாரதிதாசன் பரம்பரை--2001
10.அரங்கேறும் சிலம்புகள்--2002
11.பழையன புகுதலும்....---2002
12.பொன்னி பாரதிதாசன் பரம்பரை--2003
13.நாட்டுப்புறவியல்--2006
பின்வரும் நூல்களைப் பதிப்பாசிரியராகப் பணியாற்ரி வெளியிட்டுள்ளார்.
1.விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்--தன்வரலாறு--1995
2.பொன்னி ஆசிரியவுரைகள்--2004
தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு முப்பத்தேழு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிப் பல அறிஞர்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்.
ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் நடத்திவரும் சிறப்புமிக்க இலக்கியத்திங்களிதழாகிய "கண்ணியம்"இதழின் சிறப்புச்செய்தியாளராகவும்,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்,தமிழியல் ஆவணத்திட்டப்பணியாளராகவும் பணியாற்றியுள்ள இளங்கோவன்,இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தொகுத்த தமிழிசைக்கலைலக்களஞ்சியத்தின் ஆராய்ச்சி உதவியாளராகச் சிறப்புறப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுக்காலம் ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் (99-2005)தமிழ் விரிவுரையாளராகப்
பணியாற்றியுள்ள இளங்கோவன் 18/6/2005 முதல் புதுச்சேரி,பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்திவருகிறார்.
நாளொரு கட்டுரையும் பொழுதொரு வலைப்பதிவுமாகத் தொண்டாற்றிவரும் இந்த இளம்பேராசிரியர் எல்லாச் சிறப்புகளும் பெற்று உயர்க என வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
மைய,மாநில அரசு நிறுவனங்களும் தனியார் அறக்கட்டளைகளும் இவரைப் போன்ற உழைப்பாளரைத் தக்காங்கு போற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.