Sunday, April 6, 2008

வளர்பிறைகள் வாழியவே-1


வளர்பிறைகள் வாழியவே--1



பட்டிமன்றத்தில் வெட்டிப் பொழுது போக்கியும்
தமிழ் மொழியுணர்வும் இனவுணர்வும் சிறிதுமின்றித்
தமிழ் விரிவுரையாளரென வேடமிட்டுக் காலம் கழித்தும் வரும் தமிழாசிரியரிடையே மாணிக்கங்களென மிளிரும் தமிழ்மணிகளும் உள்ளனர்.
அவர்களை அடையாளம் காட்டவே இப்பகுதி விழைகிறது.
தமது கலலூரிப்பணி நேரங்களில் மாணாக்கரிடையே
இலக்கியவிழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நிறைவுகொள்ளாமல் ஒரு வலைப்பூவை நடத்தித் தமிழுலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்,இளங்கோவன்.
http://www.muelangovan.blogspot.com/
மேலே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்திற்குச் சென்றால்
பல பயனுள்ள இலக்கியச் செய்திகள் கிடைக்கும்
மிகவும் பிற்பட்ட சூழலில் தோன்றி(20/06/1967) தமது பெற்றோரின் ஊக்குவிப்பாலும் ஆசிரியர்களின் உறுதுணையாலும் தமிழ் முதுகலை,இளம் முனைவர்,முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்ற மு.இளங்கோவன், தாம் இதழியலில் கொண்டிருந்த ஆர்வத்தினால் இதழியலிலும் முதுகலைப் பட்டம்
பெற்றுள்ளார்.
‘மராட்டியர் ஆட்சியில் தமிழ் இலக்கியம்,தமிழகம்'என்னும் ஆய்வுத்தலைப்பில்
நிகழ்த்திய ஆய்வின் விளைவினால் இளம் முனைவர் பட்டம் ஈட்டினார்.
இன்றைய சூழலில் பாரதிதாசன் மரபுக்கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் இளைய தலைமுறையினருக்கு ஏற்படவேண்டும் என்னும் நல்லெண்ணம் இவரது பி.எச்.டி பட்டத்திற்கான ஆய்வுப்பொருளை "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க கவிதை:பாரதிதாசன் பரம்பரை-விளக்கம்,வரலாறு,மதிப்பீடு" என்றமைத்துக்கொள்ளத் தூண்டுகோலாகியது.
செயல்துடிப்பும் வினைத்திட்பமும் வாய்க்கப்பெற்ற இவ்விளைஞர் இயற்றிய
நூல்களின் பட்டியலே இவரது புலமைக்குச் சான்றாக விளங்குகிறது.
1.மாணவராற்றுப்படை--1990
2.பனசைக்குயில் கூவுகிறது--1991
3.அச்சக ஆற்றுப்படை--1992
4.மராட்டியர் ஆட்சியில் தமிழும் தமிழகமும்--1994
5.பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு--1996
6.இலக்கியம்-அன்றும் இன்றும்--1997
7.மணல்மேட்டு மழலைகள்---1997
8.வாய்மொழிப்பாடல்கள்--2001
9.பாரதிதாசன் பரம்பரை--2001
10.அரங்கேறும் சிலம்புகள்--2002
11.பழையன புகுதலும்....---2002
12.பொன்னி பாரதிதாசன் பரம்பரை--2003
13.நாட்டுப்புறவியல்--2006
பின்வரும் நூல்களைப் பதிப்பாசிரியராகப் பணியாற்ரி வெளியிட்டுள்ளார்.
1.விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்--தன்வரலாறு--1995
2.பொன்னி ஆசிரியவுரைகள்--2004
தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு முப்பத்தேழு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிப் பல அறிஞர்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்.
ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் நடத்திவரும் சிறப்புமிக்க இலக்கியத்திங்களிதழாகிய "கண்ணியம்"இதழின் சிறப்புச்செய்தியாளராகவும்,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்,தமிழியல் ஆவணத்திட்டப்பணியாளராகவும் பணியாற்றியுள்ள இளங்கோவன்,இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தொகுத்த தமிழிசைக்கலைலக்களஞ்சியத்தின் ஆராய்ச்சி உதவியாளராகச் சிறப்புறப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுக்காலம் ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் (99-2005)தமிழ் விரிவுரையாளராகப்
பணியாற்றியுள்ள இளங்கோவன் 18/6/2005 முதல் புதுச்சேரி,பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்திவருகிறார்.
நாளொரு கட்டுரையும் பொழுதொரு வலைப்பதிவுமாகத் தொண்டாற்றிவரும் இந்த இளம்பேராசிரியர் எல்லாச் சிறப்புகளும் பெற்று உயர்க என வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
மைய,மாநில அரசு நிறுவனங்களும் தனியார் அறக்கட்டளைகளும் இவரைப் போன்ற உழைப்பாளரைத் தக்காங்கு போற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




2 comments:

Venkatesh said...

இவர் பணி மேலும் சிறக்க எளியேனின் வாழ்த்துகள்!!

துாரிகா வெங்கடேஷ்
திரட்டி.காம்

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

என்னுடன் திண்ணை.காம் வலையேட்டில் போட்டி போட்டெழுதும் என் தம்பி முனைவர் மு.இ. புகழ் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்!
எஞ்ஞான்றும் அன்புடன்,
தேவமைந்தன்
(பேரா.அ.பசுபதி)
புதுச்சேரி - 605 008.