Sunday, April 6, 2008

வளர்பிறைகள் வாழியவே - 2

நினைவில் வாழும் தமிழறிஞர் கு.சிவஞானம் அவர்களின் புதல்வியாரும் சென்னை இராணி மேரி கல்லூரித் தமிழ்ப்பேராசிரியருமாகிய முனைவர் சி.கலைமகள் அவர்களைப் பாராட்டுவதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

பேராசிரியர் கு.சிவஞானம் அவர்கள் தஞ்சை சரபோசி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தபோது (1965) தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்பு உரிமைப்போர் நிகழ்ந்த்து.திரு.ம.நடராசன்('புதிய பர்ர்வை' ஆசிரியர்),திரு.பன்னீர்செல்வம்(இப்போது ஓய்வு பெற்றுள்ள அரசு அலுவலர்)முதலிய பல எழுச்சிமிக்க மாணவர்கள் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட நேரம்;மாணாக்கர்கள் எவ்வகையிலும் அரசின் அடக்குமுறைக் கொடுமைகளால் அல்லலுற்றுவிடக் கூடாது எனத் தாயுள்ளத்துடன் பரிந்துவந்து உதவிய பேராசிரியர் கு.சிவஞானம் அவர்கள் பிந்தைய ஆண்டுகளிலும் இந்திஎதிர்ப்புப் போர்மறவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தார்.

அத்தகைய தமிழ் உரிமைமறவருக்கு 12/02/1965-இல் பிறந்த சி.கலைமகள் அவர்கள் 1985-இல் தமிழ் இளங்கலைப் பட்டத்தை முதல் வகுப்பு என்னும் சிறப்புத்தகுதியுடன் பெற்றார்.1987-இல் தமிழ் முதுகலைப் பட்டத்தையும் முதல் வகுப்பிலும் பல்கலைக்கழகச் சிறப்பு வரிசையிலும் பெற்றார்.

1989-இல் இளம் முனைவர்,2001-இல் பி.எச்.டி. எனப் பட்டங்களைக் குவித்த இவர்,ஓலைச்சுவடியியல்,மொழியியல்,சமற்கிருதம்,தஞ்சைமரபுவழி ஓவியம்ஆகிய துறைகளிலும் தேர்ச்சியடைந்துள்ளார்.

தமது தந்தையார் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பொறுப்பைத் திறம்பட ஆற்றியதுபோலவே கலைமகள் அவர்களும் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளர் பணியைச் சிறப்பாக ஆற்றினார்;ஆற்றிவருகிறார்.

1994-1996-இல் சென்னைக் கேளம்பாக்கம்,தனபாலன் மகளிர் கல்லூரியில் மாணவர் உளங்கொளத் தமிழ்க்கல்வி வழங்கினார்.இவரது அழுத்தம் திருத்தமான தமிழ் ஒலிப்பும்,சுவைமிக்க இலக்கிய எடுத்துக்காட்டுகளும், அனைவரையும் ஈர்க்கும் சொல்லாற்றலும் மாணவிகளுக்குத் தேனமுதமாய்ச் சுவையளிப்பன.

1996-இல் அரசு கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்.பொன்னேரி அரசு கல்லூரி,காயிதே மில்லத் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தபின்னர் 2006 முதல் இராணி மேரி கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார்.

மலைபடுகடாம்,அகநானூற்றில் பாலைப் பாடல்கள்,இலக்கியக் கட்டுரைகள் ஆகிய தரமுயர்ந்த ஆய்வுநூல்களைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக்ம்,அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,மலேயாப் பல்கலைக்கழக்ம் ஆகிய நிறுவனங்களில் இவர் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

தேசிய மாநாடுகளிலும்,பன்னாட்டு மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் குறள்,சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பரப்பும் நோக்குடன் இலக்கியப் பேருரைகளை ஆற்றியும் இளம்பேராசிரியர்களில் இணையற்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார்.

“இவள் தந்தை என் நோற்றான்கொல்?” எனும் சொல்லை அனைவர் உள்ளத்திலும் எழுப்பும் ஆற்றல் மிக்க முனைவர் சி.கலைமகள் அவர்களைப் பாராட்டுவோம்.

இவரைப் போன்றே தமிழாசிரியப் பணியை உணர்வுடனும் ஊக்கத்துடனும்

ஆற்றுவோர் யாராயினும் அவர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

No comments: