Thursday, March 27, 2008

பொன்னவைக்கோ வாழியவே


தமிழ்நிலந் தன்னில் பல்துறைக் கல்வியும்
அமைவுறச் செழித்திட அயரா(து) உழைத்திடும்
பச்சமுத்துவின் பண்பார் துணைவர்;
பொருள்வளம் நாடியே விரைந்திடும் உலகில்
தமிழ்நலம் பெருக்கிடத் தளரா உளத்துடன்
பொறியியல் பணியைப் பொருக்கென விடுத்தே
கணித்தமிழ் நூல்பல பயனுறப் படைத்தும்
இணையப் பல்கலைக் கழகம் தன்னை
இணையிலாப் பொலிவுடன் இயங்கிடச் செய்தும்
அறிவியல் வளமெலாம் அருந்தமிழ் பெறவே
அறிஞர் கூடிட ஆவன புரிந்தும்
கணினி நுட்பமும் பொறியியல் ஒட்பமும்
அனைவரும் அறிந்திட இதழ்களில் எழுதியும்
ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் உயர்ந்திட
ஓயா(து) உஞற்றிடும் உயர்பேரறிஞர்;
கனிந்த உள்ளமும் இன்முகச் செவ்வியும்
காந்தம் போன்றே நண்பரை ஈர்த்திடும்;
புன்னகை மின்னிடும் பொலிவுறு முகமோ
பொய்சொலக் கேட்டால் பொங்கிடும் எரிமலை;
செந்தமிழ் தவழ்ந்திடும் செவ்விதழ் தன்னில்
நெருப்பும் காணலாம் நெறியில் பிறழ்ந்தோர்;
காட்டாங் குளத்தூர்க் கரம்பை இவர்
காட்டிய உழைப்பால் கல்விச்சோலை;
நாட்டினில் முதன்மை நாட்டிய நிறுவனம்;
ஈட்டிய புகழால் ஈர்த்திடும் பலப்பல
நாட்டிலிருந்து நல்லறிஞர் தமை;
தன்னவைக் களத்தில் என்னையும் ஏற்றுப்
பண்புடன் பரிவும் அன்பும் செலுத்திடும்
பொன்னவைக்கோ எனும் பெருந்தகையோரை
என்ன சொல்லிப் போற்றிட இயலும்?
பாரது போற்றப் பாரதிதாசன்
பல்கலைக் கழகத் தலைமை ஏற்றார்;
தாய்மொழிக் கல்வியைத் தகவுடன் போற்றித்
தமிழ்மொழி பயின்றிடச் சட்டம் வகுத்தார்;
சமச்சீர்க் கல்வி அமைவுடன் தழைத்திட
அரசினர் குழுவில் அரும்பணி புரிகிறார்;
திட்பமும் நுட்பமும் செறிந்த செயலினர்;
நற்றமிழ்ப் புலவரைச் சுற்றமாய்ச் சூழ்ந்திடும்
பெற்றிமை பேணும் மற்றொரு பாரி;
களைப்பும் அலுப்பும் கனவிலும் அறியா
உழைப்பின் திருவுரு;உயர்குணக் கொள்கலன்;
கல்வியின் புகலிடம்; அறிவின் வைப்பகம்;
பச்சமுத்து மெசும் முத்து; பாரினில்
பல்துறை வித்தகர் போற்றும் நன்மணி;
மாணவர் மகிழ்வுடன் அவாவிடும் பசும்பொன்;
வாழிய! வாழிய பல்வளம் பெற்று!
மனைவி மக்கள் சுற்றம் எல்லாம்
நனிபல் நலனுடன் வாழ்க! வாழ்கவே!

No comments: